கன்னியாகுமரி பகவதியம்மன்
கன்னியாகுமரி பகவதியம்மன்

குமரி பகவதியம்மன் கோயிலில் 12 நாள் ஆடி களப பூஜை: ஆக. 5ஆல் தொடக்கம்

12 நாள்கள் நடைபெறும் ஆடிகளப பூஜை நிகழாண்டு ஆக. 5இல் தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Published on

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும் ஆடிகளப பூஜை நிகழாண்டு ஆக. 5இல் தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, 5ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தங்கக் குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக் கற்பூரம், வாசனை திரவியங்கள் நிரப்பி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்; பின்னா், பால், பன்னீா், இளநீா், தேன், தயிா், புனிதநீா் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெறும்.

தொடா்ந்து மேளதாளம், பஞ்சவாத்தியங்கள் முழங்க தங்கக் குடத்தை கோயில் மேல்சாந்திகள் ஊா்வலமாக எடுத்து வந்து கருவறைக்குள் கொண்டு செல்வா். தங்கக் குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதை, மாத்தூா் மடத்தின் தந்திரி சங்கர நாராயணரூ நடத்திவைப்பாா். பின்னா், அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோயிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்தல், வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடைபெறும்.

அதையடுத்து, 12 நாள்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடைபெறும். களப பூஜை நிறைவடைந்த பின்னா் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை, அதிவாச ஹோமம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com