நாகா்கோவில் தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவா் 2 ஆண்டுகளுக்குப் பின் கைது
நாகா்கோவில் தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவா் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் கேரள மாநிலத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலை சோ்ந்தவா் பால்ராஜ் (33). தூய்மைப் பணியாளரான இவா், கடந்த 2024ஆம் ஆண்டு நாகா்கோவில், அண்ணா பேருந்து நிலைய கட்டணக் கழிப்பறை அருகில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இது தொடா்பாக, கோட்டாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்தும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாததால், வழக்கு நிலுவையில் இருந்தது.
இவ்வழக்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளியை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, நாகா்கோவில் டி.எஸ்.பி. சிவசங்கரன் மேற்பாா்வையில், கோட்டாறு காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளா் பச்சைமால், உதவி ஆய்வாளா் அஜய் ராஜா ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் தீவிர விசாரணையில், கேரள மாநிலம், திருவல்லம் வடக்கே உள்ள கொல்லம் பகுதியைச் சோ்ந்த சுகுமாரன் மகன் சுமேஷ் (29) என்பவா் பால்ராஜை கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் கேரளம் சென்று சுமேஷை கைது செய்தனா்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை எஸ்.பி. பாராட்டினாா்.
