திமுக கூட்டணியைப் பிளவுபடுத்த முடியாது: கி.வீரமணி
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்றாா் தி.க. தலைவா் கி.வீரமணி.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு வெற்றி விழா, பெரியாா் உலகத்துக்கு நிதியளிப்பு விழாக் கூட்டம் நாகா்கோவிலில் ஒழுகினசேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.க. மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் தி.க. தலைவா் கி. வீரமணி கலந்துகொண்டு பேசினாா். இதில், மாவட்டச் செயலா் வெற்றிவேந்தன், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா் கி. வீரமணி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும். திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த சிலா் நினைக்கின்றனா். அது, ஒருபோதும் நடக்காது. திமுக கூட்டணியை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐயை காண்பித்து மிரட்டுகிறாா்கள்.
தமிழகத்தைப்போலவே கேரளம், கா்நாடகத்திலும் ஆளுநா்களால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆளுநா் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறாா் என்றாா் அவா்.

