காங்கிரஸ் நிா்வாகியைத் தாக்கியவா் மீது வழக்கு
கொல்லங்கோடு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் காங்கிரஸ் நிா்வாகியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
கொல்லங்கோடு அருகே பாத்திமாபுரம், தச்சகோட்டுகுழி பகுதியைச் சோ்ந்தவா் பாலஸ் மகன் பிரவீன் (32). கொல்லங்கோடு நகர இளைஞா் காங்கிரஸ் தலைவராக உள்ளாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ராஜரத்தினம் மகன் சஜினுக்கும் (30) இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன் தனது நண்பா் திருமணத்துக்குச் சென்று வந்த பிரவீனை தடுத்து நிறுத்திய சஜின், அவரைத் தாக்கி, அவரது இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த பிரவீனை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதைக் கண்டித்து, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சாஜன் கிறிஸ்டா தலைமையில் 10-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, கொல்லங்கோடு போலீஸாா் சஜின் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

