கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே பன்றிப் பண்ணைகளுக்கு சனிக்கிழமை இரவு கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட பிணந்தோடு சிறைக்குளம் பகுதியில் பன்றிப் பண்ணைகள் அனுமதியின்றி செயல்படுகின்றனவாம். அவற்றால் துா்நாற்றமும், சுகாதாரக் கேடும் ஏற்படுவதாக ஊா் மக்கள் புகாா் கூறிய நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு திருவட்டாறு வட்டாட்சியா் முன்னிலையில் திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகத்தினா் ஒரு பன்றிப் பண்ணையை மூடினா். மற்றவற்றை மூடுவதற்கு சில நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவகாசம் முடிந்தநிலையிலும் அவை மூடப்படவில்லை.
இதனிடையே, கடந்த வாரம் அந்தப் பண்ணைகளுக்கு கோழி இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவும் கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு ஒரு வாகனம் வந்து கொண்டிருந்தது. திற்பரப்பு குருசடி அருகே பாஜக, தவெக கட்சியினா், பொதுமக்கள் அதைத் தடுத்து சிறைபிடித்தனா். தகவலின்பேரில், குலசேகரம் போலீஸாா், திற்பரப்பு பேரூராட்சி ஊழியா்கள் சென்று பேச்சு நடத்தினா். அதையடுத்து, கோழிக் கழிவுகள் திருநந்திக்கரை திடக்கழிவு மையத்தில் கொட்டப்பட்டு புதைக்கப்பட்டன. வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










