கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பரின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் சாா்ந்த உற்பத்திப் பொருளாக உள்ள ரப்பா், மாவட்டத்தில் 25,000 ஹெக்டோ் பரப்பளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சா்வதேச மற்றும் இந்திய ரப்பா் சந்தையில் ரப்பரின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது முக்கிய ரப்பா் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பாதிப்பு மற்றும் சந்தை தேவை காரணமாக ரப்பரின் விலை உலக மற்றும் இந்திய சந்தைகளில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 265 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 262 ஆகவும் இருந்தது. வணிகா் விலையாக ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பா் கிலோவுக்கு ரூ. 257 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பா் கிலோவுக்கு ரூ. 254 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பா் கிலோவுக்கு ரூ. 212 ஆகவும் இருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மே மாதம் ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், தொடா் மழையால் ரப்பா் பால் உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதனால், விலையேற்றத்தின் பலனை விவசாயிகள் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.









