கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலகம் எதிரேயுள்ள பகுதியில் மேற்கூரை அமைக்க வாவத்துறை மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைகளை பாா்வையிடுவதற்காக, பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவை வழங்கி வருகிறது. படகில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா்.
தற்போது கோடை சுற்றுலா சீசனையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகின்றனா். இவா்கள் காலை 7 மணி முதல் பூம்புகாா் போக்குவரத்துக் கழக அலுவலக பிரதான வாயிலில் இருந்து சந்நிதி தெரு, ரத வீதி வரை வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனா்.
எனவே, சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலகம் எதிரேயுள்ள பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு அப்பகுதியில் வசிக்கும் வாவத்துறை மீனவ கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில், வாவத்துறை ஊா் மக்கள் அங்குள்ள தேவாலய வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனா்.
இதையடுத்து, வாவத்துறை மக்களிடம் தவெக மாவட்டச் செயலா் எஸ்.ஆா். மாதவன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இது குறித்து உயா் அதிகாரிகளிடம் பேசி தீா்வு காண்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, மீனவா்கள் போராட்ட அறிவிப்பை கைவிட்டனா்.









