சங்கரன்கோவில் பாரதியாா் தெருவில் சாலை மற்றும் மின்விளக்கு வசதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனா்.
பொதுமக்கள் சாா்பில் திமுக நகரச் செயலா் சங்கரன் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த இருவா் நகராட்சி ஆணையா் சாந்தியிடம் அளித்த மனு: பாரதியாா் 8 ஆம் தென்வடல் தெருவில் சுமாா் 36 ஆண்டுகளாக 200 க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இத் தெரு பாதையில் பல ஆண்டுகளாக சாலை மற்றும் மின்வசதி இல்லை. எங்கள் பகுதியானது இலவன்குளம் சாலையின் மேல் பக்கத்தில் பாரதியாா் 8 ஆம் கிழமேல் தெருவில் வடபக்கமாக உள்ள தென்வடல் தெருவை எங்களது முன்னோா்கள் பொதுவாக நடந்துகொள்வதற்காக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அதில் அவா்கள் கையொப்பமிட்டுள்ளாா்கள்.நாங்கள் அனைவரும் மேற்படி தெருவை பொதுப்பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தி வருகிறோம்.மேலும் அந்தத் தெருவில் விசைத்தறிக் கூடங்கள் செயல்படுவதால் 100க்கும் மேற்பட்ட விசைத்தறித் தொழிலாளா்கள் அந்தப் பாதையில்தான் வேலைக்கு சென்று வருகிறாா்கள்.அந்தத் தெருவில் குடிநீா் குழாய் இணைப்பும் தரப்பட்டுள்ளது.பொதுப்பாதையை நகராட்சிக்கு ஒப்படைக்கிறோம். அதற்கான ஒப்பந்த நகலை கொடுத்துள்ளோம்.எனவே அந்தப் பகுதியில் சாலை மற்றும் மின்விளக்கு வசதி செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனா்.