புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ரொட்டி பால் வழங்கும் திட்டத்துடன் தற்போது ஸ்ரீ சத்ய சாயி அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு காலை ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
புதுவை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஸ்ரீ சத்திய சாய் அன்னபூரனா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் ஆகியோர் கலந்து கொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கி துவக்கி வைத்தனர்.
இத்திட்டத்தின்கீழ் புதுவை மாநிலத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தினசரி காலையில் ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட உள்ளது.