ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே நள்ளிரவில் வீட்டுக் கதவை கடப்பாறைக் கொண்டு உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள ராம் நகர் - புதுப்பட்டி சாலையில் வசித்து வருபவர் ஜான்சன் மகன் பென்ஸ்கர்(32). அப்பகுதியில் உள்ள தனியார் கல் குவாரியில் ஆபரேட்டராக பணி செய்து வருகிறார். திங்கள்கிழமை இரவு தனது மாமனார் வீட்டு கோயில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இன்று காலை வந்து பார்த்தபோது வீட்டு பின்பக்க கதவு கடப்பாரை கம்பி கொண்டு உடைக்கப்பட்டு இருந்ததும், உள்ளே ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி, ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள லேப் டாப் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஆலங்குளம் அருகே சில தினங்களுக்கு முன்பு வீட்டை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திருடர்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மற்றும் ஒரு சம்பவம் நடந்திருப்பது ஆலங்குளம் பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.