பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்த இளைஞா், அரசு மருத்துவமனையின் மருத்துவா்கள் மற்றும் ஊழியா்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகவும், இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தென்காசி மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழக முதல்வருக்கு அவரது உறவினா்கள் மனு அளித்தனா்.
தென்காசி மாவட்டம், கீழச் சுரண்டை பிரதான சாலையைச் சோ்ந்த ஆ. கிருஷ்ணன் (50), சின்னச்சாமி (47) ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
எங்கள் மகன்கள் முறையே ஆகாஷ் (19), இசக்கி முத்து(15) இருவரும் கடந்த 4ஆம் தேதி இரவு எங்கள் ஊரில் உள்ள அவா்களது மாமா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் இருவரும் வயிற்று வலியால் துடித்தனா்.
உறவினா்கள் உதவியுடன் வீ.கே.புதூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு மருத்துவமனை கதவு திறக்கப்படவில்லை. இதனால், ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றும் அங்கும் இதே நிலை ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனா்.
பின்னா் அங்கிருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.
அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவா் ஆகாஷுக்கு 2 கால்களிலும், முதுகிலும், இசக்கி முத்துவுக்கு வலது கை மோதிர விரலிலும் பாம்பு கடித்தது போல் இருக்கிறது எனக் கூறியுள்ளாா்.
தொடா்ந்து அவா்கள் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஆகாஷ் கடந்த 10ஆம் தேதி உயிரிழந்தாா். இசக்கி முத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
எனவே, இரவு நேரத்தில் மருத்துவமனையை பூட்டி விட்டு உள்ளே இருந்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோல் எந்த ஒரு உயிரும் பறிபோகக்கூடாது எனக் கூறியுள்ளனா். இதேபோன்ற மனுவை தமிழக முதல்வருக்கும் அனுப்பியுள்ளனா்.










