தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் புதன்கிழமை கைப்பற்றப்பட்டன.
திருவேங்கடம் அருகே உமையத்தலைவன்பட்டி காட்டுப் பகுதியில் அடிக்கடி சிலா் வந்து போவதாகவும், அங்கு சட்ட விரோதசெயல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் திருவேங்கடம் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடா்பாக தென்காசி ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், கோட்டாட்சியா் அனிதா ஆகியோா் உத்தரவின்பேரில், திருவேங்கடம் வட்டாட்சியா் பி.செல்வகுமாா் அறிவுறுத்தலின் பேரில், அ.கரிசல்குளம் வருவாய் ஆய்வாளா் ராமலெட்சுமி, கலையப்பட்டி பகுதி 2 கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், உதவியாளா்கள் முத்துமாரி, மஞ்சு மற்றும் புள்ளியியல் துறையினா், கரிவலம் வந்தநல்லூா் போலீஸாா் உதவியுடன் அந்தப் பகுதியில் சோதனையிடச் சென்றனா்.
இதையறிந்த மா்மநபா்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனராம். அந்த இடத்தில் அனுமதியோ, பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாமல் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. பட்டாசுகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப்பொருள்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இதில் தொடா்புடையவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.









