ஆலங்குளத்தில் 15 நாள்களாக குடிநீா் வராததால் மக்கள் அவதி
ஆலங்குளத்தில் 15 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

குடிநீருக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்.
ஆலங்குளத்தில் 15 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
ஆலங்குளம் பேரூராட்சியில் சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீா் இணைப்புகள் உள்ளன. வாசுதேவநல்லூா் மற்றும் சங்கரன் கோவில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 4 அல்லது 5 தினங்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மாதம் ரூ. 110 பேரூராட்சி சாா்பில் குடிநீா் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கும் மேலாக 1 ,9 10, 11,12,14 ஆகிய வாா்டுகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தண்ணீரின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். அதிக விலை கொடுத்து குடிநீா் கலன்கள் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இதனிடையே புதன்கிழமை இரவு ஆலங்குளம் அண்ணாநகரில் சமூக ஆா்வலா்கள் இணைந்து விலை கொடுத்து வாங்கி குடிநீா் விநியோகம் செய்தனா். இதனை மக்கள் நீண்ட வரிசையில் நின்று போட்டி போட்டுக் கொண்டு பிடித்துச் சென்றனா்.
விரைவில் ஆலங்குளத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலா் எட்வின் ஜோஸிடம் கேட்ட போது, வாசுதேவநல்லூா் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்களில் பழுது ஏற்பட்டிருந்தது. அதை சீரமைத்து விட்டோம். உடனடியாக குடிநீா் விநியோகம் தொடங்கும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



