அம்பாசமுத்திரத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சுமைஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
அம்பாசமுத்திரம் வேடுவர்தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் அய்யாபிள்ளை (43). சுமை ஆட்டோ ஓட்டுநர். இவர், கடந்த 31-1-2016 ஆம் தேதி அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோயில் தெருவுக்குச் சென்றாராம். அப்போது அங்கு கடை நடத்தி வரும் ஜாஹீர்உசேனுக்கும், அய்யாபிள்ளைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையறிந்ததும் ஜாஹீர்உசேனின் சகோதரரான அம்பாசமுத்திரம் ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பக்கீர்மைதீன் (52) அங்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அய்யாபிள்ளை, பக்கீர்மைதீனை கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து அய்யாபிள்ளையை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர், குற்றஞ்சாட்டப்பட்ட அய்யாபிள்ளைக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.