திருநெல்வேலி மாவட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை மூலம் 7 அரசுப் பள்ளிகளில் ரூ.10.02 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, புதன்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் கட்டப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த விழாவில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தார்.
இதையடுத்து ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வருக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி நன்றி தெரிவித்து பேசினார். பின்னர், புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து ஆட்சியர் பேசியது:
நபார்டு திட்டத்தின் மூலம், திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.229.76 லட்சத்திலும், அயன்குறும்பலாபேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் 107.81 லட்சம், வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.106.43 லட்சம், திருக்குறுங்குடி டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.135.64 லட்சம், அம்பாசமுத்திரம் ஏவிஆர்எம்வி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.154.88 லட்சம் என மொத்தம் 7 பள்ளிகளில் ரூ.10 கோடியே 1 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டன.
இவற்றை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்துள்ளார். கூடுதல் வசதிகளை மாணவர், மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க. தனமணி, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கர், வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.