தாமிரவருணி தண்ணீருக்காக ஏங்கும் சேதுராயன்புதூர் கிராமம்!
தாமிரவருணியில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் எங்கள் பகுதி வழியாக சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்துக்கும், விருதுநகர்


தாமிரவருணியில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் எங்கள் பகுதி வழியாக சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்துக்கும், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தண்ணீர் கெண்டு செல்லப்படுகிறது; ஆனால் தாமிரவருணி நதிக்கு அருகே இருக்கும் எங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தாமிரவருணி தண்ணீர் கிடைக்கவில்லை என சேதுராயன்புதூர் கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேயுள்ளது சேதுராயன்புதூர் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சேதுராயன்புதூர், தாமிரவருணி கரையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருந்தபோதிலும், அங்குள்ள மக்களுக்கு இதுவரை சுத்திகரிக்கப்பட்ட தாமிரவருணி தண்ணீர் கிடைக்கவில்லை. மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தாமிரவருணி தண்ணீர் சேதுராயன்புதூருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீரும், தாமிரவருணி நீரும் ஒரே மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்படுவதால், இரண்டு நீரும் கலந்தே தெருக்குழாய்களில் வருகிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
இது தொடர்பாக சேதுராயன்புதூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறியதாவது: 2005-இல் மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. எங்கள் ஊரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. ஆங்காங்கே தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளும் உள்ளன. மூன்று மேல்நிலைத் தொட்டிகளுக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீரேற்றப்படுகிறது. அதே நீரோடு, மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் எங்கள் பகுதிக்கு வழங்கப்படும் தாமிரவருணி தண்ணீரையும் கலந்து தெருக்குழாய்களில் விடுகிறார்கள். இரண்டு நீரும் கலப்பதால், சளி உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வரும் ஆற்று நீரை தனியாக மக்களுக்கு வழங்க வேண்டும். தாமிரவருணி நீரை குறைந்த அளவு கொடுத்தாலும், அதை தனியாக வழங்க வேண்டும். ஏனெனில் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு எங்களின் பொருளாதாரம் இல்லை. அதனால் ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரை நம்பியே நாங்கள் இருக்கிறோம். ஆழ்துளைக் கிணற்று நீரோடு தாமிரவருணி நீரை கலக்கக் கூடாது என பலமுறை ஆட்சியரிடமும், மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு கொடுத்துவிட்டோம். நாங்கள் மனுகொடுக்கிறபோது, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என ஆட்சியரும், அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்தபோதிலும், இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை. ஊராட்சியிலும் போதிய நிதி இல்லை என தட்டிக் கழிக்கிறார்கள்.
எங்கள் பகுதி வழியாகத்தான் சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்துக்கும், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தாமிரவருணி தண்ணீர் செல்கிறது. ஆனால் தாமிரவருணியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கும் எங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தாமிரவருணி தண்ணீர் இதுவரை கிடைக்கவில்லை. இன்று வரை தாமிரவருணி தண்ணீருக்காக எங்கள் கிராமமே ஏங்கிக் கொண்டிருக்கிறது. தனியாக குழாய் பதித்து சுத்திகரிக்கப்பட்ட தாமிரவருணி தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதற்கு அதிகாரிகள் செவி சாய்க்க வேண்டும் என்றார்.
எம்.எல்.ஏ. பதில்: இது தொடர்பாக திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனிடம் கேட்டபோது, "சேதுராயன்புதூரில் 3 மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. அந்தத் தொட்டிகளிலிருந்து தனியாக குழாய்கள் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட தாமிரவருணி நீரை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
இது தொடர்பாக மானூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகனிடம் கூறியது: சேதுராயன்புதூர் ஊராட்சியில் நிதி இருக்கும்பட்சத்தில் தனியாக குழாய் பதித்து தாமிரவருணி நீரை வழங்கிவிட முடியும். அடுத்த சில தினங்களில் அங்கு சென்று ஆய்வு செய்துவிட்டு அங்குள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தாமிரவருணி நீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...