இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்தும், விபத்தில்லா பயணம் குறித்தும் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகமூர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாளையங்கோட்டை-சீவலப்பேரி சாலையில் உள்ளது பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையம். அந்தப் பகுதியில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளைப் பிடித்து போலீஸார் அபராதம் விதிப்பது வழக்கம். இதனால் அந்த வழியாகச் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள், காவல் நிலையத்தை நெருங்கும்போது, தலையில் ஹெல்மெட்டை மாட்டிக்கொள்வதையும், பின்னர் கழற்றி இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் வைத்துக் கொண்டு பயணிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஆனால், இப்போது தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகமூர்த்தி, ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து அபராதம் விதிப்பதற்கு பதிலாக, வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்தும், விபத்தில்லாமல் பயணம் செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரது அன்பான அணுகுமுறை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்களும் காவல் துறையினரின் அன்பான வேண்டுகோளை ஏற்று ஹெல்மெட் அணிவதோடு, விதிகளை மதித்தும் வாகனங்களை ஓட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் சண்முகமூர்த்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கடந்த ஓராண்டாக மாலை வேளையில் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பாக, தரமான ஹெல்மெட் அணியுங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டாம், வாகனத்துக்கு காப்பீடு செய்யுங்கள், 3ஆவது நபர் காப்பீடும் முக்கியம், சாலை விதிகளை கடைப்பிடிப்பதால் விபத்தை தவிர்க்கலாம், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் செல்லாதீர்கள், அதிவேகத்தில் செல்லாதீர்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள உங்கள் பிள்ளைகளை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என வாகன ஓட்டிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். இதேபோல் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
தாலுகா காவல் நிலைய போலீஸார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், "நான் இந்த வழியில் தினந்தோறும் அடிக்கடி பயணிக்கக்கூடிய நபர். இதற்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் பலமுறை அபராதம் செலுத்தியிருக்கிறேன். ஆனாலும் ஹெல்மெட் அணியத் தோன்றியதில்லை. ஆனால், இப்போது போலீஸார் நடத்தி வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஹெல்மெட் அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன் என்றார்.
சாலை விதிகளை கடைப்பிடிக்க வைப்பதற்கு வாகன ஓட்டிகளை தண்டிக்கவோ, அபராதம் விதிக்கவோ தேவையில்லை. அன்பான அணுகுமுறையே போதும் என்பதை நிரூபித்திருக்கிறார் உதவி ஆய்வாளர் சண்முகமூர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


