கரோனா நுண்கிருமி தொற்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்க தோஷ பரிகார யாகங்களும், தெய்வப் ப்ரீத்தியும் செய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் ஸ்ரீ சூர்ய மங்கலம் அத்வைத வேத வித்யா பீடத்தின் பீடாதிபதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
உலக அளவில் 2019 நம்பர் முதல் கரோனா நுண் கிருமி தொற்று ஏற்பட்டு இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு தோஷ பரிகார யாகங்களும், தெய்வப் ப்ரீத்தியும் செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஸ்ரீ சூர்யமங்கலம் அத்வைத வேத வித்யா பீடத்தின் பீடாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, 2019 நவ. 5ஆம் தேதி தனுசு ராசியில் வியாழனும் சனியும் ஒன்று சேர்ந்தது. வியாழனும் சனியும் ஒன்று சேர்ந்து தனுசு ராசியிலோ, மீன ராசியிலோ வந்தால் அது தெய்வக் கோபத்தை வெளிப்படுத்தும். 2019 நவம்பரில் தான் உலகில் முதன்முதலாக சீனாவில் கரோனா தொற்று உருவானது. நான்கு அல்லது அதற்கு அதிகமான கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்று சேர்ந்தால் அது ப்ரவர்ஜியா யோகம் எனப்படும். அதில் சனி, வியாழன் கூட இருந்தால் மஹா ப்ரவர்ஜியா யோகம் எனப்படும். மஹா ப்ரவர்ஜியா யோகத்தில் சூரிய கிரகணம் சேர்ந்து வந்தால் அது உலகத்தில் பேரழிவுகளை உருவாக்கும்.
2019 நவம்பர் 5ஆம் தேதி மஹா ப்ரவர்ஜியா யோகத்தோடு சேர்ந்து உருவாகிய சனி குரு கிரக யோகத்தில் 2019 டிசம்பர் 26, 2020 ஜூன் 21 ஆகிய இரண்டு நாள்கள் சூரிய கிரகணங்கள் உருவாகியது உலகில் நடக்கக் கூடிய தோஷ பலன்களை எடுத்துக் கூறுகிறது. இப்போது மகர ராசியில் இருக்கும் குரு, சனி கிரக யோகம் 2021 ஏப்ரல் 6 வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் உலகில் ஏற்பட்டுள்ளதைப் போல் இந்தியாவிலும் கரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்புண்டு. மேலும் அயல் நாடுகள், தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றங்களாலும் பேரழிவுகள் உண்டாகும்.
இந்த பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற தோஷ பரிகார யாகங்களும், தெய்வப் ப்ரீத்தியும் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.