திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மனித உரிமை மீறல் தொடா்பான வழக்குகள் விசாரணை வெள்ளிக்கிழமை 2- ஆவது நாளாக திருநெல்வேலியில் நடைபெற்றது.
மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் காவல் துறை, அரசு ஊழியா்கள் மீதான மனித உரிமை மீறல் புகாா்கள் குறித்த விசாரணை, திருநெல்வேலி அரசு விருந்தினா் மாளிகையில் வியாழக்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து 2-ஆவது வெள்ளிக்கிழமை வழக்குகளை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தாா். இதில், செங்கோட்டையில் காவல் துறையினா் பொய் வழக்கு தொடா்ந்ததாக அளிக்கப்பட்ட புகாா், திருநெல்வேலி மாநகராட்சியின் பணியின் போது கைகளை இழந்த ஒப்பந்தப் பணியாளா் புகாா் உள்பட மொத்தம் 51 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வழக்குகளின் அடுத்த விசாரணையை செப். 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.