கல்லிடைக்குறிச்சி அருகே வயலுக்கு தண்ணீர்ப் பாய்ச்ச சென்ற தந்தை, மகன் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகன் பேச்சிமுத்து (55). அவரது மகன் வனராஜ் (28). இருவரும் சனிக்கிழமை இரவு மணிமுத்தாறு அணையடிவாரத்தில் உள்ள வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றனராம்.
அப்போது, தமிழ்நாடு மீன்வளத்துறையின் மீன்குஞ்சுப் பண்ணை அருகே 40 அடி கால்வாயைக் கடப்பதற்காக கால்வாயில் இறங்கியதும் திடீரென மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்கள் அலறலைக் கேட்ட அருகிலிருந்த வயலில் இருந்தவர்கள் வந்து பார்த்த தண்ணீரில் போடப்பட்டிருந்த கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து இருவரும் பலியானது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக போலீஸார் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்ததையடுத்து மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்சாரத்தை நிறுத்தினர். மேலும் அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினர் வந்து இருவர் சடலங்களையும் மீட்டனர். சடலங்களைக் கைப்பற்றிய கல்லிடைக்குறிச்சி போலீஸார் உடற்கூராய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சோதனையில் வனப்பகுதியிலிருந்து வயலுக்கு வரும் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் மின்கம்பத்திலிருந்து நேரடியாக மின்சாரத்தை மின்கம்பிகள் மூலம் கால்வாயில் செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மின்கம்பிகள் மூலம் மின்சாரம் செலுத்தியவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.