நெல்லையில் பேரவைத்தலைவர் அப்பாவு முன் பெண் ஒருவர் கந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் வேளாண்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 77 விவசாயிகளுக்கு பவர் டில்லரை வழங்கிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் அதற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் கிடைக்காது.
ஏனெனில் மாநிலங்களவையில் பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லை. எனவே மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற முடியாது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு எத்தனையோ மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது பாஜக அரசு. அதேபோல் இந்த முறையும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பார்கள்.
ஆனால் எதிர்க்கட்சியினர் அமைதியாக இருந்து அந்த மசோதாவை நிறைவேற்ற விட மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார். இதனிடையே அரசு விழாவின்போது பேரவைத்தலைவர் அப்பாவு, ஆட்சியர் கார்த்திகேயன் முன் பெண் ஒருவர் கந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.