தீயணைப்பு அலுவலா்களுக்கு நேரில் ஆஜராக சம்மன்

திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பணம் வைத்தது தொடா்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தீயணைப்பு அலுவலா்கள் இருவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Published on

திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பணம் வைத்தது தொடா்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தீயணைப்பு அலுவலா்கள் இருவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தில், கடந்த நவ. 18 ஆம் தேதி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ.2,52,400-ஐ கைப்பற்றினா்.

இந்நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவில் அதே அலுவலகத்துக்குள் நுழைந்த மா்மநபா் பணப்பையை வைப்பது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து துணை இயக்குநா் சரவணபாபு அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து, ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த தீயணைப்பு வீரா் ஆனந்த், அவரது உறவினா் முத்துசுடலை, மேலப்பாளையத்தைச் சோ்ந்த விஜய் (31), தீயணைப்பு வீரா்கள் மூா்த்தி (48), முருகேஷ்(43) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி தீயணைப்பு அலுவலா் கணேசன், சென்னை எழும்பூா் தீயணைப்பு அலுவலா் மோரீஸ் ஆகியோா் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிச.28) நேரில் ஆஜராகுமாறு மாநகர போலீஸாா் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com