திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் செயல்பட்டு வந்தன. அதன் 99 ஆண்டுகள் குத்தகைக் காலம் 2028ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினா் 2024ஆம் ஆண்டு தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி பணியாளா்களையும் பணியிலிருந்து விடுவித்தனா். அதைத் தொடா்ந்து, வனப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த வனத்துறையினா், தொழிலாளா்களை வனப்பகுதியிலிருந்து வெளியேற உத்தரவிட்டனா்.