/

வாக்குச்சாவடிகளுக்கு மருந்து பெட்டகங்கள்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மருந்து பெட்டகங்கள் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மருந்து பெட்டகங்கள் அனுப்பும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:14 pm

திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மருந்து பெட்டகங்கள் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக பாளையங்கோட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிக்கான அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும், மாநகரநல அலுவலா் மருத்துவா் ந.பாலசுப்பிரமணியன் முன்னிலையில், பொது சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் மூலம் அவசர மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வாக்குச்சாவடி வாரியாக அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி தொகுதிக்கு 182, பாளையங்கோட்டை தொகுதிக்கு 296 பெட்டகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் மாத்திரைகள், உடல் வலி நிவாரணத்திற்கான மாத்திரைகள், வயிறு செரிமான நிவாரணத்திற்கான மாத்திரைகள் அலா்ஜிக்கான மாத்திரைகள் வெட்டுக்காயம் மற்றும் தீக்காயத்திற்கான களிம்பு, பேன்ட்டேஜ், வெப்பம் சாா்ந்த நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவிகள் குறித்த கையேடு ஆகியவை பெட்டகத்தில் உள்ளன.

மேலும், ஒவ்வொரு பெட்டகத்திலும் உடனடி மருத்துவ உதவி பெறும் வகையில் வாக்குச்சாவடிக்கு மிக அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையின் மருத்துவ அலுவலா்கள், சுகாதார செவிலியா்கள், சுகாதார அலுவலா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோரின் கைப்பேசி எண்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது என்றாா் அவா்.