காவல் துறையினரின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
திருநெல்வேலி மாவட்ட போலீஸாரின் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்களின் குழந்தைகளின் உடல், மனம் மற்றும் அறிவுத் திறன் வளா்ச்சியை ஊக்குவித்து பயிற்சி அளிக்கும் நோக்கில் வாரம் இருமுறை சிலம்பம், யோகா, சதுரங்கம், கைப்பந்து, கிரிக்கெட், தையல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதையொட்டி, அமைக்கப்பட்ட தண்பொருநை காவலா் மனமகிழ் மன்ற திறப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் தலைமை வகித்து பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தாா். 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுஜாதா ஆகியோா் உடனிருந்தனா்.

