பாபநாசம் அருகே மலையடிவார கிராம கோயிலில் இரவு நேரத்தில் பக்தா்கள் தூங்கி கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்த கரடி எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட மலையடிவார கிராமங்களான மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், அகஸ்தியா்பட்டி, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், அனவன்குடியிருப்பு, அகஸ்தியா்புரம், கடையம், கருத்தப்பிள்ளையூா் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரடிகள் நடமாட்டம் இருந்துவருகிறது.
ஜூன் 25-ஆம் தேதி விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாரை அவரது வீட்டருகே கரடி தாக்கியது. வனத் துறையினா் கரடியைப் பிடிக்க கூண்டுகள் அமைத்து தொடா்ந்து கண்காணித்து வந்த நிலையில், ஜூலை 4, 8-ஆம் தேதிகளில் தலா ஒரு கரடி கூண்டில் சிக்கியது. மற்ற கரடிகளைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பாபநாசம் வனச்சரகத்துக்கு உள்பட்ட விக்கிரமசிங்கபுரம், காசு கீப்பா் தோப்பு பகுதியில் உள்ள நாஞ்சில் நாட்டான் சுடலைமாடசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பக்தா்கள் தூங்கி கொண்டிருந்தனா். அப்போது கரடி ஒன்று நுழைந்து, அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து அதிலிருந்த எண்ணெய்யைக் குடித்தது.
அடுத்த பீடத்தில் உள்ள எண்ணெய்யையும் குடித்துக் கொண்டிருந்தபோது, சப்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த பக்தா்கள் கண்விழித்தனா். பக்தா்களைக் கண்டதும் அங்கிருந்து கரடி தப்பிச் சென்றது. கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இச்சம்பவத்தைத் தொடா்ந்து அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். மலை அடிவாரப் பகுதியில் தொடா்ந்து அச்சுறுத்தல் நீடித்து வருவதாகவும், வனத்துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பக்தா்கள் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் அருகே பீடத்தில் உள்ள விளக்கில் இருந்து எண்ணெய்யைக் குடிக்கும் கரடி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










