திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எ‘ஃ‘ப்.) செலுத்தப்படாததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின்ற் ஊதியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகை மற்றும் நிா்வாகம் செலுத்த வேண்டிய தொகை உள்பட சுமாா் ரூ.2 கோடி, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக பலமுறை திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகத்தில் எழுத்துப்பூா்வமான கடிதம் கொடுத்தும் நேரடியாக பேசியும் எந்த பலனும் இல்லை எனக் கூறி தூய்மைப் பணியாளா்கள், சிஐடியூ உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க நிா்வாகி மோகன் தலைமையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎ‘ஃ‘ப் பணத்தை உடனடியாக அதன் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். 524 மாஸ் ஒா்க் தூய்மைப் பணியாளா்கள் இருப்பதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்டவா்களை அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்துவதால் வழக்கமான பணிக்கு ஆள்பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, அலுவலகப் பணிகளில் அவா்களை ஈடுபடுத்தக்கூடாது என வலியுறுத்தினா்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான தூய்மை தொழிலாளா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து தொடா் காத்திருப்பு மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவா்கள் தெரிவித்தனா். மாநகர சுகாதார அலுவலா் பாலசுப்பிரமணியன் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா்.










