ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஸ்டெர்லைட் தடை தொடரும்: தீர்ப்பை வரவேற்றுத் தூத்துக்குடியில் கொண்டாட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தூத்துக்குடியில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

News image
தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடும் கட்சியினர்.
Updated On :18 ஆகஸ்ட் 2020, 7:56 am

DIN

ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தூத்துக்குடியில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற பேரணியின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 3 பேர் சில நாள்களில் உயிரிழந்தனர். இதற்கிடையே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி தமிழக அரசு மூட உத்தரவிட்டது. இதையெடுத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆலைக்கு மே 29 ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் நடவடிக்கை சரியானது அல்ல என்றும் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான விவதாங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்நிலையில், நீதிபதிகள் சிவஞானம், பவான ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு விதித்த தடை உத்தரவு தொடரும் என்றும் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர். 

Story image

மேலும், வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர்கள் தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து தூத்துக்குடியில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. திமுக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. 

இதேபோல, சுற்றுச்சூழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை நீதிமன்ற தீர்ப்பு உணர்த்துவதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தீர்ப்பு குறித்து தனது சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலர் இரா. ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்தத் தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், போராட்டக்குழு நிர்வாகிகள் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பாக மட்டும் பார்க்காமல் அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் தெரிவித்துள்ளார்.

இதேபோல, மதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையிலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பிலும் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.