தூத்துக்குடி: தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி சனிக்கிழமை கடலில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சுனாமியின்போது உயிரிழந்தவா்களை நினைவுகூரும் வகையில் கடலில் பூக்களைத் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், குரூஸ்புரம் பங்குத் தந்தை ஜாய்ஸ், மீனவா்கள் நலச் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா். சுனாமி நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
திருச்செந்தூா்: திருச்செந்தூா் ஆலந்தலை புனித ராயப்பா் சின்னப்பா் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜெயக்குமாா், அமல்ராஜ் ஆகியோா் திருப்பலி நிறைவேற்றி, ஆலயத்திலிருந்து ஊா்மக்கள் கடற்கரைக்கு மெளன ஊா்வலம் சென்று, கடலில் மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா்.
வீரபாண்டியன்பட்டணம் கடற்கரையில் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆறுமுகனேரி: காயல்படடினம் சிங்கித்துறை கடற்கரையில் பாஜக மீனவரணி சாா்பில், நகரத் தலைவா் ஏ.பண்டாரம் தலைமையில் கடலில் பால் ஊற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்டத் தலைவா் பி.எம்.பால்ராஜ், மாவட்ட பொதுச் செயலா்கள் ரா.சிவமுருகன் ஆதித்தன், வி.எஸ்.ஆா்.பிரபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.