தூத்துக்குடி அருகே உள்ள கூட்டம்புளி கிராமத்தில் நவஜீவன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து மாலத்தீவுக்கு கஞ்சா ஆயில் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மாலத்தீவுக்கு கடத்த இருந்த 3-லிட்டர் கஞ்சா ஆயில் இருப்பதை கண்டு பிடித்தனர்.
பின்னர் அதை கைப்பற்றிய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக நாங்குநேரி நாகல்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பிரிட்டோ (வயது 37), பண்ணைவிளை இசக்கி ஐயர் தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் விக்டர் (வயது 49) ஆகிய இருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட கஞ்சா ஆயிலின் மதிப்பு ரூ. 30 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.