நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பங்குனித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து சுவாமி முகில்வண்ணன் கொடி மண்டபத்திற்கு எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து கொடிப்பட்டம் சுத்தி வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருவிழா நாள்களில் தினமும் காலையில் சுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் வீதி புறப்பாடு, மாலையில் சிம்ம வாகனம், அனுமாா் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம் , யானை வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். ஏப்ரல் 5-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்துள்ளனா்.