தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம், பருத்தி, கம்பு, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் கடந்த 2020-21 ஆண்டுகளில் போதிய விளைச்சல் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மானாவாரி பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்காத 2020-21 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.