மீன்வளத்துறை உதவி இயக்குனரை கண்டித்தும் மாற்றம் செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் மீனவர்களை பாதிக்கக்கூடிய வகையில் மீன்பிடி படகுகளுக்கு லைசன்ஸ் வேண்டும், ஒரு படகில் நான்கு மீனவர்களுக்கு மேல் மீன் பிடிக்க செல்லக்கூடாது, மீன்பிடி படகுகளுக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இன்சூரன்ஸ் கட்ட வேண்டும், நாட்டு படகு மற்றும் பைபர் படங்களுக்கு பச்சை வண்ணம் பூச வேண்டும்,
படகில் பயன்படுத்தப்படும் இஞ்ஜினுக்கு ஜிஎஸ்டி பில் வேண்டும், படகை புதிதாக செய்ததற்கான ஜிஎஸ்டி பில் வழங்க வேண்டும் இந்த சான்றுகளை வழங்கும் படகுகளுக்கு மட்டுமே டீசல் மானியம் வழங்கப்படும் எனக் கூறினாராம். இது குறித்து பேச்சுவார்த்தைக்கு சென்ற மீனவர்களுக்கு உரிய முறையில் பதிலளிக்க வில்லையாம்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் சார்பில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பிரச்னையை தீர்க்க வலியுறுத்தியும் இன்று மாவட்ட முழுவதும் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.