வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா
வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழாDPS

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா பற்றி...
Published on

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து, காலை 5.30 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய சிவக்குமார் வல்லவராயர் கொடியினை ஏற்றினார்.

அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி காலை 6.45 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், திருவிழா பிரிவு ஆறுமுகராஜ், மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஆக. 11ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Summary

Avani Thiruvizha started at tiruchendur Veylukandamman Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com