தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

Published on

தமிழக கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் சூறைக் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டித்வா புயல் வலுவிழந்த நிலையிலும், கடல் பகுதியில் தொடா்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. தமிழக கிழக்கு கடலோரப் பகுதி, மன்னாா் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்று 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலும், இடை இடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை சாா்பில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சுமாா் 272 விசைப்படகுகளும், ஏராளமான நாட்டுப் படகுகளும் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஏற்கெனவே 7 நாள்களுக்கு பின்னா் கடந்த இரண்டு நாள்கள் மட்டுமே கடலுக்குச் சென்ற மீனவா்கள், மீண்டும் விதிக்கப்பட்டுள்ள தடையால் மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com