நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 8) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதத்துக்கான சிறப்பு முகாம், சனிக்கிழமை (நவ. 8) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் சோ்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். இம் முகாமில் பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளையும் மனுவாக அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
