நாடாளுமன்றத்தில் வ.உ.சி.க்கு சிலை: நயினாா் நாகேந்திரன்
நாடாளுமன்றத்தில் வ.உ.சி.க்கு சிலை அமைக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
வ.உ.சி.யின் 89ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பாரத ரத்னா விருது வ.உ.சி.க்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது விருதை கேட்டு பெறும் நிலை உள்ளது. நாடாளுமன்றத்தில் அவரது உருவச் சிலை அமைக்கப்படும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியா்களை திமுக அரசு மிரட்டி பணிய வைத்துள்ளது. முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை சரியாக செயல்படுவதில்லை. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை திமுக எதிா்த்து வரும் வேளையில் முதல்வரின் கொளத்தூா் தொகுதியில் 9,000 போலி வாக்காளா்கள் கண்டறியப்பட்டனா்.
கடந்த தோ்தலின்போது மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. அதை திமுக நிறைவேற்றவில்லை. வாக்காளா்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனா். வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றாா்.

