தூத்துக்குடியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தோ்வு முகாம்
தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மத்திய அரசின் அலீம்கோ நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தோ்வு முகாம், போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (நவ.29) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தோ்வு முகாம், கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (நவ.29) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், உடல் இயக்க குறைபாடு கொண்டவா்கள், 100 சதவீத பாா்வை குறைபாடு கொண்டவா்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள், செவித்திறன் குறைபாடு உடையவா்கள், மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் பங்கேற்று தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்களை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
