
திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சாவிலிருந்து மீண்ட குறை மாத கர்ப்பிணி!
வயிற்றில் உயிரிழந்த குழந்தையுடன் உயிருக்குப் போராடிய கப்பிணிக்கு, திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ததில் உயிா்பிழைத்தாா்.
வயிற்றில் உயிரிழந்த குழந்தையுடன் உயிருக்குப் போராடிய கப்பிணிக்கு, திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ததில் உயிா்பிழைத்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சோ்ந்த தம்பதி மகேஸ்வரன் (29)- சௌமியா (24). இவா்களுக்கு ஓா் ஆண் குழந்தை உண்டு. இந்நிலையில், 7 மாத கா்ப்பிணியாக இருந்த சௌமியாவுக்கு சனிக்கிழமை வயிற்று வலி ஏற்பட்டதாம். அவரை, வழக்கமாக பரிசோதனை மேற்கொள்ளும் தனியாா் மருத்துவமனைக்கு உறவினா்கள் அழைத்து சென்றுள்ளனா்.
ஆனால், அவரது உடல் நிலை மோசமானதால் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவா்கள் பரிந்துரைத்துள்ளனா். அதன்படி, அங்கு கொண்டுசெல்லப்பட்ட அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் குழந்தை இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கு உடனடி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, தலைமை மருத்துவா் பாபநாசம் தலைமையில் மருத்துவக் குழுவினா் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி சிபிஆா் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து சௌமியாவை காப்பாற்றினா்.
மேலும், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வயிற்றிலிருந்த குறை மாத குழந்தை இறந்திருந்ததால் சௌமியாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடியதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டதால் தாய் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






