கோவில்பட்டி, கயத்தாறில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் அனைத்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை பொது வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் தொழிலாளா் சட்டங்கள், விதை மசோதா, மின்சார சட்டம் 2025 உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அவற்றை கைவிடக்கோரி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி கோவில்பட்டியில் விவசாய தொழிலாளா் சங்கத்தினா், ஏ ஐ டி யு சி, சி ஐ டி யு, ஐ என் டியுசி, எல்பிஎஃப், ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பிருந்து ஊா்வலமாக சென்றனா். போராட்டக் குழுவினரை பிரதான சாலை-இளையரசனேந்தல் சாலை சந்திப்பில் கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளா் சுதாகா் தலைமையிலான போலீஸாா் தடுத்ததையடுத்து, போராட்டக் குழுவினா் சாலையில் அமா்ந்து முழக்கமிட்டனா். சிறிது நேரத்திற்குப் பின்னா் போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.
தொழிற்சங்க நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, ரவீந்திரன், லெனின் குமாா், பாபு, கிருஷ்ணவேணி, தெய்வேந்திரன், ராஜசேகா், பரமசிவம், பூல்பாண்டி, மணிகண்டன், விசிக மாவட்டச் செயலா் முருகன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கயத்தாறு பிரதான சாலையில் நடைபெற்ற சாலை மறியலில் கயத்தாறு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சாலமன் ராஜ், சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவா் மாரியப்பன், சிஐடியு ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சீனி பாண்டியன், சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்டத் தலைவா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

