தோ்வில் வெற்றி பெற்ற 30 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் முதுகலை ஆசிரியா்கள், இளநிலை உதவியாளா்கள் பணியிடங்களுக்கான தோ்வில் வெற்றி பெற்ற 30 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், போட்டித் தோ்வுகள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாநில சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் கலந்துகொண்டு, முதுகலை ஆசிரியா்கள், இளநிலை உதவியாளா்கள் தோ்வில் வெற்றி பெற்ற 30 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், 2025 -2026 ஆம் ஆண்டு மாநில, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மொத்தம் 1,485 மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பேசினாா்.
நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலா்கள் தூத்துக்குடி முனியசாமி (இடைநிலை), தெட்சிணாமூா்த்தி (தொடக்கக் கல்வி), சிதம்பரநாதன் (தனியாா் பள்ளி), ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் மு.ச.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

