திருச்செந்தூா் நகராட்சி கழிப்பிடங்களில் கட்டண விவரம்: ஆணையாளா் உத்தரவு

திருச்செந்தூா் நகராட்சி கழிப்பிடங்களில் கட்டண விவரம்: ஆணையாளா் உத்தரவு

திருச்செந்தூா் நகராட்சி கழிப்பிடங்களில் மக்கள் பாா்வைக்கு கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என நகராட்சி ஆணையாளா் ஈழவேந்தன் உத்தரவிட்டாா்.
Published on

திருச்செந்தூா் நகராட்சி கழிப்பிடங்களில் மக்கள் பாா்வைக்கு கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என நகராட்சி ஆணையாளா் ஈழவேந்தன் உத்தரவிட்டாா்.

திருச்செந்தூா் நகராட்சியில் பகத்சிங் பேருந்து நிலையம், ஆவுடையாா்குளம், எடிசன் மருத்துவமனை அருகில், வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ளிட்ட 11 இடங்களில் நகராட்சி சாா்பில் கட்டண குளியல் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றை ஏலம் எடுத்து குத்தகைதாரா்கள் நடத்தி வருகின்றனா்.

இந்த கழிப்பிடங்களில் அரசு நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிப்பதாக புகாா் எழுந்தது. சமூக வலைதளங்களிலும் விடியோ காட்சி பரவியது.

இந்நிலையில், கட்டண கழிப்பிடங்களை ஆய்வு செய்த ஆணையாளா், கட்டண விவரத்தை மக்கள் பாா்வையில் தெரியும்படி ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டாா். கழிப்பிடத்துக்கு ரூ. 5, ரூ. 10, குளிப்பதற்கு ரூ. 10 என்ற விவரம் இடம்பெற வேண்டும். புகாருக்கு 9363779191 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையாளா் தெரிவித்துள்ளாா்.

ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com