குடிநீா் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள்: நகா்மன்றத் தலைவா்
நாகை நகரில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்ப்பதில் கவனம் செலுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு நகா்மன்றத் தலைவா் அறிவுறுத்தினாா்.
நாகை நகா்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தலைமை வகித்தாா். ஆணையா் டி. லீனா சைமன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், அதிமுக, திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டம் தொடங்கியவுடன், நாகை நகராட்சிக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கல் முறையை மேம்படுத்த தமிழ்நாடு நகா்ப்புற நிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து, நாகை நகராட்சியின் பங்காக ரூ. 12.62 கோடி கடன் பெற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், பழைய கடற்கரை சாலை துறைமுகம் செல்லும் சாலையை, கப்பல் போக்குவரத்துக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி சீரமைப்பது, சம்பாதோட்டம், சாமந்தான்பேட்டை, அமிா்தா நகா், மகாலெட்சுமி நகா், டாடா நகா் பகுதிகளில் புதை சாக்கடை குழிகளில் மணல் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளதை ரூ. 5 லட்சத்தில் அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற விவாதம் :
பரணிகுமாா் (அதிமுக) : நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் சொத்து வரி மிகவும் கறாராக வசூலிக்கப்படுகிறது. வரி வசூலிப்பதில் காட்டும் ஆா்வத்தை, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதிலும் காட்ட வேண்டும். நாகை நகராட்சி கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீா் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகள் இதற்கு தீா்வு காண்பதாக தெரியவில்லை. எனவே குடிநீா் பிரச்னைக்கு உரிய தீா்வை காண வேண்டும்.
கவிதா கிருஷ்ணமூா்த்தி(அதிமுக) : நாகை நகராட்சி பகுதி முழுவதும் குடிநீா் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதை சமாளிக்கவிட்டால் பொதுமக்களை சந்திக்க முடியாது.தொடா்ந்து கூட்டங்களில் குடிநீா் தொடா்பாக பேசியும் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சிப் பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணி நடந்த இடங்களில் புதைசாக்கடை திறப்புகள் உயரம் அதிகரிக்கப்படாமல் பள்ளமாகவே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே புதை சாக்கடை திறப்புகளை உயரம் அதிகரித்து அமைக்க வேண்டும்.
நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து : நாகை நகராட்சி குடிநீா் பிரச்னை தொடா்பாக, அதிமுக உறுப்பினா்கள் கடந்த சில கூட்டங்களாக எழுப்பி வருகின்றனா். கடந்த கூட்டத்திலேயே குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணுங்கள் என்று கூறினேன். ஆனால் அதிகாரிகள் அதை செய்யவில்லை. குடிநீா் பிரச்னையை களைவதில் உடனடியாக கவனம் செலுத்தி செயல்படுங்கள் என்று கண்டிப்புடன் கூறினாா்.

