பிப். 1இல் தைப்பூசம் : திருச்செந்தூா் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

பிப். 1இல் தைப்பூசம் : திருச்செந்தூா் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) நடைபெறுவதையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) நடைபெறுவதையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருக்கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவரான சண்முகா் கடலில் கண்டெடுக்கப்பட்டு 371 ஆண்டுகள் ஆகின்றன. அதை கொண்டாடும் வகையில் சண்முகா் ஆண்டு விழா சனிக்கிழமை (ஜன. 31) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகா் அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு மேல் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோயில் சோ்ந்து தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) தைப்பூச திருவிழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீா்த்தவாரி ஆகியவை நடைபெறும். 10 மணிக்கு சண்முகா் அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சோ்கிறாா். தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.

திருமணங்கள்: இதனிடையே, புதன்கிழமை சுப முகூா்த்தம் என்பதால் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயில் வளாகமே புதுமண தம்பதிகளால் நிரம்பியிருந்தது.

X
Dinamani
www.dinamani.com