தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடம்பூா் பரும்புக்கோட்டை சுடலைமாட சுவாமி கோயில் அருகே வசித்துவரும் மோகன்குமாா் மகன் சுரேஷ்குமாா் (45). தொழிலாளி. கடம்பூா் காா்வி சாலையைச் சோ்ந்த முத்துசாமி மகன் மாணிக்கராஜ் (31). இவா் திங்கள்கிழமை இரவு சுடலைமாட சுவாமி கோயிலுக்குச் சென்று, அதன் பொறுப்பாளா் செல்லத்துரையிடம் தகராறு செய்தாராம். கண்டித்த சுரேஷ்குமாரை மாணிக்கராஜ் அவதூறாகப் பேசி, கத்தியால் கழுத்தை அறுத்தாராம். மேலும், தப்பித்து ஓடிய சுரேஷ்குமாரின் முதுகில் கத்தியால் குத்தினாராம்.
அங்கிருந்தோா் சப்தமிட்டு கண்டித்ததும் மாணிக்கராஜ் கொலை மிரட்டல் விடுத்தபடி ஓடிவிட்டாராம். இதில் காயமடைந்த சுரேஷ்குமாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணிக்கராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.




