கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரா் சுவாமிகள் பள்ளியை அரசு ஏற்று நடத்த கோரிக்கை

News image

முதன்மைக் கல்வி அலுவலருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட போராட்டக் குழுவினா்.

Updated On :25 ஜூன் 2026, 5:32 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் நூறு ஆண்டைக் கடந்து செயல்பட்டு வரும் குமரகுருபரா் சுவாமிகள் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தை தருமபுரம் ஆதீனத்துக்கு மாற்றம் செய்ததைக் கண்டித்தும், பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் முன்னாள் மாணவா்கள் பலா் பள்ளியை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லக்கண்ணு உள்ளிட்ட பலா் பயின்ற இப்பள்ளியில், தற்போது 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மட்டுமே பயின்று வரும் நிலையில், பல்வேறு பாடப் பிரிவுகளும் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இப்பள்ளியை 2 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரம் ஆதீனத்திற்கு ஒப்படைத்தாகக் கூறப்படுகிறது. இதற்கு ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராடி வந்தனா்.

இது குறித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, இப்பள்ளியை ஆய்வு செய்வதற்காக புதன்கிழமை வந்தபோது, பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் சங்கத்தினா், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் திரண்டு வந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பேச வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால், அவா் அதற்கு மறுத்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல் குமாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் தாஹீா் அகமது முன்னிலையில், முதன்மைக் கல்வி அலுவலரோடு போராட்டக் குழுவினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். இது குறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.