நீடாமங்கலம், நவ. 17: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்டட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நீடாமங்கலம் நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஏற்கெனவே சில இடங்களில் செயல்பட்டது. தற்போது நீடாமங்கலம் நகரில் உள்ள தஞ்சை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஒரு காலத்தில் மராட்டிய மன்னரின் அரண்மனையாக விளங்கிய கட்டடத்தின் ஒரு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
விவசாயிகள் அதிகம் வசிக்கும் நீடாமங்கலம் பகுதியில் குறுவை, சம்பா பருவத்தில் அறுவடையான நெல்லை விவசாயிகள் பெருமளவில் இந்த நிலையத்தின் மூலம் விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப் பதம் அதிக அளவில் இருந்தால், கொள்முதல் நிலையம் முன் தார்ச் சாலையில் காய வைத்த பிறகு நெல்லை விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகள் நெல்லை சாலையில் காயவைக்கும் சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும், நெல் விற்பனைக்காக கொண்டு வரப்படும் வாகனங்களும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசு கிடங்குக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளும் சாலையின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுவதால், அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் குளம் கீழ்க்கரையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி, கொத்தமங்கலம் சாலையில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வேன், கார், இரு சக்கர வாகனங்களும் அணிவகுத்து நிற்க வேண்டியுள்ளது.
மேலும், தற்போது உள்ள நெல் கொள்முதல் நிலையம் சாலையையொட்டி அமைந்துள்ளதால், மன்னார்குடியிலிருந்து - ரிஷியூர் செல்லும் பேருந்துகள், நீடாமங்கலத்திலிருந்து - பெரம்பூர் - ரிஷியூர் வழியாக பொதக்குடி, தேவங்குடி, கூத்தாநல்லூர் வரை செல்லும் வாகனங்களும் சாலையை ஆக்கிரமித்து நிற்கும் நிலையும் ஏற்படுகிறது.
அதோடு, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு, ராஜாசத்திரத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும் கொள்முதல் நிலைய வளாகப் பகுதி திறந்த வெளியாக உள்ளது. அதனால், கொள்முதல் செய்யப்படும் நெல்லைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, தமிழக அரசு நீடாமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நகரப் பகுதியில் நிரந்தரமான கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
அப்படி நிரந்தரக் கட்டடம் கட்ட முன் வரும்போது நெல் மூட்டைகளை நிலையத்திற்கு கொண்டு வரும் வாகனங்களும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல வரும் லாரிகளையும் நிறுத்துவதற்கு போதுமான இடம் அளிப்பதையும் கவனத்தில் கொண்டு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.