நீடாமங்கலம் சாலைகள் சீரமைக்கப்படுமா?

நீடாமங்கலம், நவ. 24: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் மிக மோசமாக உள்ள சாலைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், இந்தச் சாலைகளைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என
Updated on
1 min read

நீடாமங்கலம், நவ. 24: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் மிக மோசமாக உள்ள சாலைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், இந்தச் சாலைகளைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  நீடாமங்கலம் வட்டத் தலைமை இடமாகவும், பேரூராட்சியாகவும் உள்ளது. பிற மாநிலங்களிலிருந்து புனிதத் தலங்களான நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கன்னி, நவக்கிரக தலமான ஆலங்குடி ஆகிய ஊர்களுக்கு நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பேருந்துகள், கார்கள், வேன்கள் மற்றும் பயணிகள் பேருந்துகள் வந்து செல்கின்றன.

   இவை தவிர, லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும் இந்த வழியாகத்தான் அனைத்து ஊர்களுக்கும் செல்கின்றன. அதேபோல, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, முத்துப்பேட்டை, மன்னார்குடி போன்ற ஊர்களிலிருந்தும் நீடாமங்கமலம் வழியாகவே கும்பகோணம், சென்னை வரையிலான அரசு, தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

  நீடாமங்கலம் நெடுஞ்சாலை மைசூர்- நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது என்பதோடு, திருவாரூர் மாவட்டத்தில் முக்கியத்தும் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது. நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்க திருச்சி முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச் சாலைத் திட்டம், கும்பகோணம்- பட்டுக்கோட்டை சாலை மேம்பாட்டுப் பணி போன்றவற்றுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

   இந்நிலையில், நீடாமங்கலம் நகரில் சாலைகள் அடிக்கடி சேதம் அடைகின்றன. சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகனப் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்தச் சாலையைக் கடந்து செல்லும் போது கீழே விழுந்து காயமடைகின்றனர்.   நெடுஞ்சாலைத் துறையினர் பழுதடைந்த சாலைகளைச் சீரமைத்தாலும், அவை சில நாள்கள் மட்டுமே நன்றாக இருக்கின்றன. மீண்டும் சாலையின் நிலை மிகவும் மோசமாகி விடுகிறது. இதற்குக் காரணம் நான்கு வழிச் சாலையில் அதிக வாகனங்கள் செல்வது போல, நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் அதிக அளவில் வாகனங்கள் செல்வதுதான்.   

   நீடாமங்கலம் தேசிய நெடுஞ்சாலையைப் போல, தற்போது பேரூராட்சி தெருக்களின் சாலைகளும் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன. மழைக் காலங்களில் சாலைகளில் நீர் தேங்கி நிற்பதால், கொசுத் தொல்லை அதிகரித்து தொற்றுநோய் ஏற்படும் நிலை உள்ளது.  குறிப்பாக, காமராஜர் காலனி பகுதியில் சாலையும், சாக்கடையும் மழைக் காலத்தில் ஒன்றாகவே உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

  எனவே, நீடாமங்கலம் நகரில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com