அரியலூர் சித்தேரி மராமத்து செய்யப்படுமா?

அரியலூர், அக். 9:  அரியலூரில் உள்ள சித்தேரியை மராமத்து செய்து பாசனத்துக்காக தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.    அரியலூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையின் கீழ்ப
Updated on
2 min read

அரியலூர், அக். 9:  அரியலூரில் உள்ள சித்தேரியை மராமத்து செய்து பாசனத்துக்காக தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

   அரியலூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையின் கீழ்பகுதியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சித்தேரி. பாசன ஏரியான இது வருவாய்த் துறை கணக்கில் 64 ஏக்கர் ஆயக்கட்டு பாசன வசதியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    பின்னர், அப்போது சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒன்றியத் தலைவராகவும் இருந்த கோ. சிவபெருமாளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்ததன் பேரில், இந்த ஏரி ஆழப்படுத்தப்பட்டு, சுமார் 120 ஏக்கர் அளவுக்கு பாசன வசதி விரிவாக்கம் செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.

   காமராஜர் ஆட்சிக் காலத்தில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த கக்கன் அரியலூருக்கு வந்த போது, ஏரியில் மேலும் ஒரு மதகு அமைத்து பாசன வசதிக்கு உதவ வேண்டும் என்று விவசாயிகள் கொடுத்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து 2 மதகுகள் கட்டப்பட்டன.

   செட்டி ஏரி, ஐயப்பன் நாயக்கன் ஏரி நிரம்பியதும் சித்தேரிக்கு செல்லும் வகையில் நீர்வரத்து இருந்தது. இதனால், இந்த ஏரியை பயன்படுத்தி பாசனம் செய்து வந்த விவசாயிகள் மிகவும் பயனடைந்து வந்தனர்.

   அரியலூரின் சாக்கடை, மழைநீர் சித்தேரியில் வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்ட வரத்து வாரிகள் இப்போதும் உள்ளன.

சித்தேரிக்கு வந்து சேரும்  சாக்கடை நீர் மணலைக் கொண்டு வந்து சேர்த்ததாலும், ஏரியை முறையாக ஆழப்படுத்தி மராமத்து செய்யாததாலும் ஏரி மேடிட்டு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால், தற்போது பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.

   இந்த ஏரியிலிருந்து பாசனம் செய்யப்பட்டு வந்த நிலங்கள் எல்லாம் தற்போது பயன்பாடில்லாமல் முள், பூண்டுகள் வளர்ந்து தரிசாக மாறிவிட்டன.

   சித்தேரியிலிருந்து வரும் தண்ணீரைக் கொண்டு பாசனம் செய்து வந்த விவசாயிகளில் சிலர், பாசனத்துக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் நிலத்தை விற்றுவிட்டனர். எனவே, பாசன பரப்பு குறைந்துவிட்ட நிலையில், தற்போது நிலத்தை வைத்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையிலாவது சித்தேரியை மராமத்து செய்து, ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

   இதுகுறித்து அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் கூறியது:

   சித்தேரியை மராமத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சித்தேரி பாசன விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டு, அதன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த மனு பொதுப் பணித் துறை, ஒன்றியக் குழு அலுவலகம் என பல இடங்களுக்கு மாறி மாறிச் சென்று, இறுதியாக மராமத்து செய்ய போதிய நிதி இல்லை என்று கூறி கிடப்பில் போடப்பட்டது.

   பல ஆண்டுகளாக விவசாயிகள் பயிரிடாமல் இருப்பதால் இந்த ஏரியை பயன்படுத்தி பாசனம் செய்து வந்த நிலங்கள் தற்போது தரிசாகவும், முள்காடாகவும் மாறிவிட்டன. சிமென்ட் ஆலைகளுக்காக விவசாய நிலங்கள் ஏற்கெனவே வாங்கப்பட்டுவிட்டதால் அரியலூர், செந்துறை பகுதிகளில் விவசாய உற்பத்தி மிக மிக குறைந்துவிட்டது.

   எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருதி, சித்தேரியை மராமத்து செய்ய வேண்டும். ஏரி பராமரிப்பு சட்டத்தின் கீழ் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

   பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த சுவடே தெரியாமல் ஏரிகள் இல்லாமல் போய்வரும் நிலையில், பாசன வசதியை வழங்கி வந்த ஏரியை மராமத்து செய்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com