அரியலூர்- பெரம்பலூர் இடையே போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படுமா?

அரியலூர்,அக்.19: அரியலூர்- பெரம்பலூர் இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  அரியலூரில் தற்போது சிமென்ட் ஆலைகளின் எண்
Updated on
2 min read

அரியலூர்,அக்.19: அரியலூர்- பெரம்பலூர் இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 அரியலூரில் தற்போது சிமென்ட் ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆலைகளில் நேரடியாக வேலை பெறுபவர்கள் மட்டுமல்லாது, மறைமுகமாக பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது.

 அரியலூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டதால் வேளாண்மை, கலால் போன்ற முக்கியத் துறைகளைத் தவிர, பெரும்பாலான துறைகளைக் கொண்டு ஆட்சியரகம் செயல்பட்டு வருகிறது. மேலும், அரியலூரில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் அதிக அளவில் உள்ளன.

 சிமென்ட் ஆலைகளுக்கு வேலைக்கு வருவோர், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. திருச்சியிலிருந்து அரியலூருக்கு இயக்கப்படும் ரயில்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாகத்தான் உள்ளது.

 ஆனால், துறையூர், பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு வரவேண்டுமென்றால் பேருந்தில்தான் வர வேண்டும். துறையூரிலிருந்து பெரம்பலூருக்கு இயக்கப்படும் பேருந்துகளும் போதியளவில் இல்லை. பெரம்பலூரிலிருந்து கவுல்பாளையம், பேரளி, சித்தளி, குன்னம், மேலமாத்தூர் வழியாக பேருந்துகள் அரியலூருக்கு இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 30 கி.மீ. தொலைவு உள்ள இந்த வழித்தடத்தில் சாதாரணப் பேருந்துகளில் ரூ.  8.50, தனியார் பேருந்துகளில் ரூ.  9-ம், பி.பி. பேருந்துகளில் ரூ.  10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.

 இரு மாவட்டங்களின் தலைநகரங்களாக உள்ள ஊர்களுக்கு அரசு சார்பில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும் அரியலூர்- பெரம்பலூர் இடையே இயக்கப்படும் பேருந்துகள் போதுமானதாக இல்லை.

 அரியலூரிலிருந்து பெரம்பலூருக்கும், பெரம்பலூரிலிருந்து அரியலூருக்கும் இந்த நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு வந்து செல்பவர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், வேலைக்குச் செல்வோர் தங்களது அலுவலகங்களுக்கு காலை 11 மணிக்கு மேல்தான் சென்று சேர வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது.

 அரசுப் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது என்றால், தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளது. தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை கிராமங்களுக்குள் செல்வதால் பயண நேரம் அதிகமாகிறது.

 அடிக்கடி பழுதாகும் பேருந்துகள்: பெரம்பலூர்- அரியலூர் இடையே இயக்கப்படும் குறைந்த அளவு பேருந்துகளும் பழையனவாக உள்ளன. இந்தப் பேருந்துகள் பல இடங்களில் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுவதாகவும் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 சாலைகள் பராமரிப்பும் சரியில்லை: குன்னத்திலிருந்து அரியலூர் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதிலும், அரியலூர் நகருக்குள் வருவதற்குள் இந்தச் சாலையில் பயணம் செய்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.

 எனவே, இரு மாவட்டத் தலைநகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் மட்டுமே பயணிகளின் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com